Friday, July 24, 2009

நெஞ்சை நெகிழ வைத்த ராமநாதன் சேட்டன்

விஜய் தொலைக்காட்சியில் கோபிநாத் தொகுத்து வழங்கும் 'நடந்தது என்ன' நிகழ்ச்சியை எப்போதாவது பார்ப்பது உண்டு .நேற்றிரவு வழக்கத்துக்கு மாறாக பார்த்த போது மனதுக்கு நெருக்கமான ஒரு தொகுப்பை காட்டினார்கள்.

சில வருடங்களுக்கு முன் கேரளாவின் பாலக்காடு பகுதியிலிருந்து சென்னைக்கு பிழைக்க வந்தவர் ராமநாதன் .தொடக்கத்தில் சாதாரண பெட்டிக்கடை வைத்து பிழைப்பை ஆரம்பித்தவர் இப்போது கால்டாக்சி ஓட்டி பிழைக்கிறார் .கெட்டிவாக்கம் பகுதியில் ஒரு மொட்டி மாடி அறை போன்ற சிறிய வீட்டில் குடியிருக்கும் ராமநாதனுக்கு எத்தனை பெரிய மனது . சில ஆண்டுகளுக்கு முன்னர் மலையாள தினசரியை படித்துக்கொண்டிருந்த ராமநாதனின் கண்ணில் ஒரு செய்தி இடறுகிறது .சென்னை பொது மருத்துவமனை பிணவறையில் கேட்பார் யாரிமின்றி சுமார் 80 பிணங்கள் இருப்பதாக ,அதை அடக்கம் செய்ய யாரும் இல்லை என்பது தான் செய்தி .மனம் வருந்திய ராமநாதன் உடனே மருத்துவமனைக்கு சென்று பிணங்களை பார்க்கிறார் .பல பிணங்கள் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கின்றன ..அங்குள்ள அதிகாரிகளிடம் பிணங்களை அடக்கம் செய்ய விரும்புவதாக சொல்ல ,ஏகப்பட்ட நடைமுறை சிக்கல்களுக்கு பின் 22 பிணங்களை எடுத்து வந்து மரியாதையான முறையில் அடக்கம் செய்கிறார்.

பின்னர் இந்த பணியை தொடர்ந்து செய்து வருகிறார் ..ரயில்களில் ,விபத்துகளில் அடிபட்டு இறந்தவர்களின் பிணங்களை யாரும் உரிமை கோராமலோ ,கேட்பாரற்று கிடந்தாலோ அவற்றை எடுத்து தன் சொந்த செலவில் சகல மரியாதைகளோடும் அடக்கம் செய்து வருகிறார் ..இப்போது இவர் பெயர் பிரபலமாகி எங்காவது அனாதை பிணங்கள் கிடந்தால் இவரின் கைதொலை பேசிக்கு மக்கள் அழைத்து சொல்கிறார்கள் ..உடனே இவர் காரியத்தில் இறங்கி பிணத்தை பெற்று அடக்கம் செய்கிறார்.இதுவரை 300-க்கு மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்திருக்கிறார்.

"இறந்தவர் எந்த ஜாதி ,மதம் என்று எனக்கு தெரியாது ..இருந்தாலும் உரிய மரியாதையோடு நல்லடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு இந்து ,ஒரு கிறிஸ்தவர் ,ஒரு இஸ்லாமியர் மூவரை கொண்டு அவரவர் முறைப்படி மந்திரமோ ,ஜெபமோ சொல்ல வைத்து மலர்கள் தூவி அடக்கம் செய்கிறேன் " என்கிறார் இராமநாதன்.

சமுதாய தொண்டு செய்வதற்கு தெருவை சுத்தம் செய்வது போன்ற பணிகள் இருக்க குறிப்பாக இந்த பணியை எப்படி செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு "அது போன்ற பணிகளை செய்வதற்கு நிறைய பேர் முன்வருவார்கள் ..இது போன்ற எளிதில் யாரும் முன் வராத பணியை நான் செய்ய வேண்டும் என்பதால் செய்கிறேன்" என்ற பதில் வருகிறது.

இத்தகைய உயர்ந்த உள்ளம் கொண்ட இராமநாதனுக்கு குழைந்தை பாக்கியம் கிட்டவில்லை ..அது பற்றி வருத்தமில்லையா என்று கேட்டப்பட்டபோது அது பற்றி தான் வருத்தப்படவில்லை ..இன்றே எனக்கு மரணம் வந்தாலும் நிறைந்த மனதோடு ஏற்றுக்கொள்ளுவேன் ..எனக்கு குழைந்தை இல்லையே தவிர என்னை 'சேட்டா' என இங்குள்ள மக்கள் அழைக்கும் போது உண்மையான அன்போடும் மரியாதையோடும் அழைப்பதாக உணர்கிறேன் ..எனக்கு வாரிசு இல்லையே தவிர இங்கு ஏராளமான சொந்த பந்தங்கள் இருக்கிறார்கள் .அன்பு பாசம் என்றால் என்ன என்பதை இந்த தமிழ்நாட்டு மக்கள் தான் எனக்கு காண்பித்தார்கள் .நான் இங்கே தான் சாக விரும்புகிறேன் என குறிப்பிட்டு விட்டு மேலும் தொடர்ந்தார்...

"இப்போ கூட இதை பார்த்துக்கொண்டிருப்பவர் சிலர் கண்கள் கலங்குவார்கள் ..அவர்கள் தான் என் பிள்ளைகள் ,அண்ணன் தம்பிகள் " என்ற அர்த்தத்தில் முடித்தார்..

சத்தியமாக அவர் இதை சொல்ல ஆரம்பிக்கும் முன்னர் என் கண்கள் பனித்திருந்தன.





Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator

Adhesives
Adhesives